செய்திகள்

நவாஸ் ஷெரிப் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

Published On 2017-09-12 14:17 IST   |   Update On 2017-09-12 14:17:00 IST
பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமபாத்:

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி அவர் பதவியை விட்டு விலகினார். அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிப் அந்த உத்தரவை எதிர்த்து மூன்று மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை இன்று (12-ம் தேதி) நீதிபதி எஜாஸ் அப்சல் தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. நவாஸ் ஷெரிப்பை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டதும் இதே அமர்வுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வுதான் விசாரிக்க வேண்டும் என நவாஸ் ஷெரிப், அவரது மனைவி மரியம் ஷெரிப் மற்றும் அவர்களது மகள், மகன்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

இதையடுத்து, இதுதொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின்போது அரசுதரப்பு மற்றும் நவாஸ் ஷெரிப் தரப்பு வக்கீல்களின் முதல்கட்ட வாதப் பிரதிவாதத்தை கவனித்த நீதிபதிகள், இவ்வழக்கை 5 நீதிபதிகளை கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றுமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Similar News