செய்திகள்

மோடியின் இலங்கை பயணத்தில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்து இல்லை - அதிபர் சிறிசேனா

Published On 2017-05-01 00:17 GMT   |   Update On 2017-05-01 00:17 GMT
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தின்போது இருநாடுகளுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடும் திட்டமில்லை என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
கொழும்பு:

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் மே மாதம் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையிலும் ஐ.நா. சபை சார்பில் விசாக தினம் மிகப்பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு அடுத்த வாரம் செல்ல இருக்கிறார்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின்போது, இரு நாடுகளுக்கிடையே சில ஒப்பந்தங்கள், குறிப்பாக திரிகோணமலை துறைமுகத்தில் முக்கிய எண்ணெய் கிடங்கை பராமரிப்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் சிறீசேனா,” பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின்போது, எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட மாட்டாது. இந்தியப் பிரதமரின் பயணம் தொடர்பாக சமூகவலைதளத்தில் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. ஐ.நா. சார்பில் நடைபெற இருக்கும் விசாக தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே, பிரதமர் மோடி கொழும்பு வருகிறார். ஒப்பந்தங்கள் மூலம் நமது நாட்டின் பகுதிகளை இந்தியா கையகப்படுத்தப் போவதாக வெளியிடப்படும் தவறான கதைகளை நம்பி விட வேண்டாம் என்று இலங்கை மக்களை கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

திரிகோணமலை துறைமுகத்தில் எண்ணெய் கிடங்கை பராமரிப்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திட இருப்பதாக வந்த தகவலுக்கு அக்கிடங்கின் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News