செய்திகள்

டிரம்புடன் இணக்கமாக செல்லவே பாகிஸ்தான் விரும்புகிறது - பாக். வெளியுறவு ஆலோசகர்

Published On 2017-02-12 10:47 GMT   |   Update On 2017-02-12 10:47 GMT
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்துடன் இணக்கமாக செல்லவே பாகிஸ்தான் அரசு விரும்புவதாக, பாகிஸ்தான் வெளியுறவு ஆலோசகர் சர்தார் அஜீஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசை வலியுறுத்திவந்தார். அதனை ஒட்டிய நடவடிக்கையாக, மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் மீது வழக்குப்பதிவு செய்த பாகிஸ்தான் அரசு அவரை வீட்டுக்காவலில் அடைத்தது.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம், பாகிஸ்தான் வெளியுறவு ஆலோசகர் சர்தார் அஜீஸ் கூறியதாவது:-

டிரம்ப் நிர்வாகத்துடன் இணக்கமாக செல்லவே பாகிஸ்தான் அரசு விரும்புகிறது. அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவரிடம் தொலைபேசியில் பேசினார். இரு தலைவர்களின் பேச்சுவார்த்தை இனிமையான ஒன்றாகவே இருந்தது.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எப்போதுமே குரல் எழுப்பிக் கொண்டே இருக்கும், ஐ.நா சபை-க்கு காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக கடிதங்கள் தொடர்ந்து அனுப்பி வருகிறோம். தேசிய நலன் கருதியே ஹபீஸ் சயீத் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானியர்களுக்கு, அமெரிக்க விசா தடை செய்யப்படும் என்ற தகவலில் உண்மையில்லை.

இவ்வாறு தெரிவித்தார். 

Similar News