செய்திகள்

ஏமன் நாட்டில் 800 அல் கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

Published On 2016-04-25 10:06 IST   |   Update On 2016-04-25 10:06:00 IST
ஏமன் நாட்டில் அல் கொய்தா தீவிரவாதிகளின் பிடியில் இருந்த முக்கிய நகரை அரபு நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த படைகளின் உதவியுடன் ராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும், இந்தப் போரில் அல் கொய்தா தீவிரவாதிகள் 800 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சனா:

ஏமன் நாட்டில் அண்டைநாடான ஈரானின் ஆதரவுடனும், அல் கொய்தா தீவிரவாதிகளின் துணையுடனும் உள்நாட்டு புரட்சிப் படையினர் பல பகுதிகளை கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த பகுதிகளை மீட்பதற்காக
சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு படைகள் ஏமன் அரசுக்கு உதவிசெய்து வருகின்றன.

அவ்வகையில், ஹட்ராமாவ்ட் மாகாணத்தில் கடந்த மாதம் அல் கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பகுதியில் உள்ள அல் கொய்தா தீவிரவாதிகள் நிலைகுலைந்து போயுள்ளனர்.

இந்நிலையில், அவர்களின் பிடியில் இருந்த முக்கிய நகரமான முகால்லா நகரை ஏமன் படைகள் மீட்டுள்ளன. இங்குள்ள விமான நிலையம், ஷேர் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் அல் கொய்தாவின் ராணுவ தலைமையகம் ஆகியவற்றையும் அரசுக்கு ஆதரவான படைகள் கைப்பற்றியுள்ளன.

இவற்றை கைப்பற்ற நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 800 அல் கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், எஞ்சியுள்ள தீவிரவாதிகள் ஷப்வா மாகாணத்தில் உள்ள பாலைவனப் பிரதேசங்களுக்கு தப்பியோடி விட்டதாகவும் ஏமன் அரசு அறிவித்துள்ளது.

Similar News