உலகம்
இலங்கையில் விமானப்படை விமானம் கீழே விழுந்து விபத்து- 2 பயிற்சி விமானிகள் உயிரிழப்பு
- சீனா தயாரித்த பிடி-6 ரக விமானம் விபத்துக்குள்ளானது.
- இரண்டு விமானிகளின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து கிழக்கே 165 மைல் தொலைவில் உள்ள கிழக்கு நகரமான திருகோணமலையில் உள்ள சீனக்குடா தளத்தில், விமானப்படை அகாடமியில் இருந்து நேற்று காலை வழக்கமான பயிற்சிக்கு விமானம் புறப்பட்டது.
சீனா தயாரித்த பிடி-6 ரக விமானம் காலை 11 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இதில், பயணித்த இரண்டு பயிற்சி விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானிகளின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விவரிக்கவில்லை. என்றாலும், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.