தமிழ்நாடு செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே தொழிலாளி அடித்து கொலை- உடலில் கல்லை கட்டி கல்குவாரி குட்டையில் வீசிய கும்பல்

Published On 2025-04-26 15:06 IST   |   Update On 2025-04-26 15:06:00 IST
  • இறந்து கிடந்தவர் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவந்தது.
  • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காரண்டப்பள்ளி ஊராட்சி தொட்டபிலி முத்திரை கட்சுவாடி செல்லும் சாலை அருகே தனியார் கிரானைட் கல்குவாரி ஒன்று கடந்த 10 வருடங்களாக செயல்படாத நிலையில் உள்ளது.

இந்த கல்குவாரியில் பாறை வெட்டி எடுக்கப்பட்டு தண்ணீர் தேங்கியுள்ள குட்டையில் நேற்று இரவு ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் காரண்டப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி ஆனந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இறந்து கிடந்தவர் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவந்தது. உடலை சுற்றி கயிறு சுற்றி இருந்தது. இறந்து கிடந்த நபரை வேறு எங்கேயே கொலை செய்து விட்டு கல்லை கயிற்றால் கட்டி சடலத்தை மர்ம கும்பல் வீசி சென்றுள்ளது தெரிய வந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News