தமிழகத்தில் 8 இடங்களில் வைகோ பிரசாரம்: ஆக. 9-ந்தேதி தூத்துக்குடியில் தொடங்குகிறார்
- ஸ்டெர்லைட் வெளியேற்றம் என்ற தலைப்பில் தூத்துக்குடியில் வைகோ பேச உள்ளார்.
- ஆகஸ்டு 18-ந்தேதி திருப்பூரில் இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் பேசுகிறார்.
சென்னை:
பாராளுமன்றத்தில் 30 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் 8 இடங்களில் மாநில வாழ்வாதாரங்களை பாதுகாக்க பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதி தூத்துக்குடியில் அவரது இந்த பிரசாரம் தொடங்குகிறது. ஸ்டெர்லைட் வெளியேற்றம் என்ற தலைப்பில் அவர் தூத்துக்குடியில் பேச உள்ளார்.
ஆகஸ்டு 10-ந்தேதி கடையநல்லூரில் மதச்சார்பின்மையும், கூட்டாட்சியும் என்ற தலைப்பிலும், 11-ந்தேதி கம்பத்தில் முல்லை பெரியாறும், நியூட்ரினோவும் என்ற தலைப்பிலும், 12-ந்தேதி திண்டுக்கல்லில் விவசாயிகள், மீனவர்கள் துயரம் என்ற தலைப்பிலும் பேச உள்ளார்.
ஆகஸ்டு 13-ந்தேதி கும்பகோணத்தில் மேகதாதுவும் மீத்தேனும் என்ற தலைப்பிலும், 14-ந்தேதி நெய்வேலியில் நிலக்கரி நிறுவனம் பற்றியும் பேசுகிறார். ஆகஸ்டு 18-ந்தேதி திருப்பூரில் இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் பேசுகிறார்.
ஆகஸ்டு 19-ந்தேதி சென்னை திருவான்மியூரில் சமூக நீதியும், திராவிட இயக்கமும் என்ற தலைப்பில் பேசுகிறார். அவருடன் அனைத்து கூட்டங்களிலும் ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன், கவிஞர் மணிவேந்தன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.