மும்மொழி விவகாரத்தை மறைக்க ரெய்டு- உதயநிதி ஸ்டாலின்
- குழந்தைகளிடம் கையெழுத்து வாங்கக்கூடாது.
- ஏற்கனவே மிஸ்டுகால் கொடுத்து 1 கோடி பேரை சேர்த்தார்கள்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறை அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பின்னர், உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்திற்கு இதுவரை 3 முறை அரசு முறை பயணமாக வந்துள்ளேன். அரசு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் திருப்திகரமாக உள்ளது.
திருத்துறைப்பூண்டி நகரில் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் முதல்வர் விளையாட்டு அரங்கம் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், திருவாரூரில் ரூ.18 கோடி மதிப்பில் 12 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
திருத்துறைப்பூண்டி வீரன் நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்கள் வீட்டு மனை கேட்டு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற முதலமைச்சர் 77 குடும்பத்தினருக்கு பட்டா வழங்குவது மட்டுமல்லாமல் ரூ.5 லட்சம் மதிப்பில் அவர்களுக்கு வீடும் கட்டித்தர உத்தரவிட்டு உள்ளார்.
ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு ஆகியவற்றை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதால் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி வருகிறது.
குழந்தைகளிடம் கையெழுத்து வாங்கக்கூடாது. நாங்கள் நீட் தேர்வுக்கு கிட்டத்தட்ட 1 கோடி கையெழுத்து வாங்கினோம். அப்போது பள்ளி மாணவர்களை தவிர்த்துவிட்டு தான் கையெழுத்து வாங்கினோம்.
ஏற்கனவே மிஸ்டுகால் கொடுத்து 1 கோடி பேரை சேர்த்தார்கள். அதனுடைய தொடர்ச்சியாக இதை பார்க்கிறேன் என்று கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.