200-க்கும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி: உதயநிதி
- நம்முடைய அரசின் பல்வேறு திட்டங்களால் இன்றைக்கு 11.20 சதவீதம் வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
- 2026 சட்டசபை தேர்தலில் சென்ற முறை பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றாக வேண்டும்.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது இல்லத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர் ராம சரவணன் மகள் சாய்ஸ்ரீ-ஜீனத் பிரியன் திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:-
நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகளை கடந்து இன்றைக்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்காக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
நம்முடைய அரசின் பல்வேறு திட்டங்களால் இன்றைக்கு 11.20 சதவீதம் வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்று மத்திய அரசின் புள்ளி விவரங்களிலேயே தெரிவித்து இருக்கிறார்கள். ஆகவே இந்த திராவிட மாடல் அரசுக்கும், நம் முதலமைச்சருக்கும் நம் அத்தனை பேரும் முழு ஆதரவை தர வேண்டும். நான் உங்களிடம் கேட்ப தெல்லாம் அடுத்த 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது.
நாம் அனைவரும் ஒரு உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து நம் முதலமைச்சர் 2-வது முறையாக பதவியில் உட்கார வேண்டும் என்றால், நம் திராவிட முன்னேற்றக் கழகம் 7-வது முறையாக ஆட்சியில் அமர வேண்டும் என்றால், நீங்கள் அத்தனை பேரும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டார்கள், தேர்தல் பிரசாரத்தை, அரசின் சாதனைகளை, முதலமைச்சரின் பணிகளை, திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
2026 சட்டசபை தேர்தலில் சென்ற முறை பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். தலைவர் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று இலக்கு கொடுத்து இருக்கிறார்.
நாம் அனைவரும் களத்தில் இறங்கி, முழுமையாக பணியாற்றினால் 200 இல்லை 200-க்கும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும். அதற்கு நாம் அத்தனை பேரும் இந்த திருமண நிகழ்வில் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.