S.I.R.-க்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டத்தில் த.வெ.க. பங்கேற்காது என தகவல்
- தமிழ்நாட்டில் நவம்பர் 4-ந் தேதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் தொடங்க உள்ளன.
- அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிக்கான அட்டவணையை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வீடு, வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கும் பணி 4-ந் தேதி தொடங்கி டிசம்பர் 4-ந் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாட்டில் நவம்பர் 4-ந் தேதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கு தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு த.வெ.க.விற்கு தி.மு.க அழைப்பு விடுத்திருந்தது.
தி.மு.க. சார்பில் நடத்தப்படும் கூட்டம் என்பதால் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை. தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடந்திருந்தால் தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்று இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு சார்பில் நடந்த தொகுதி மறு சீரமைப்பிற்கு எதிராக அனைத்துக்கட்சி கூட்டத்தில த.வெ.க. பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.