கோவை வடக்கு தொகுதியில் போட்டியா? - வானதி சீனிவாசன் பேட்டி
- அ.திமு.க.-பா.ஜ.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி பணிகளை செய்து வருகிறோம்.
- நடிகர் கமல்ஹாசன் பாராளுமன்றத்தில் பேசியது குறித்து ஒன்றும் புரியவில்லை.
கோவை:
கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் பா.ஜ.க.வை சேர்ந்த வானதி சீனிவாசன் இந்த முறை தொகுதி மாறி போட்டியிட உள்ளதாக பேசப்பட்டு வந்தது.
அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணபதி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.விடம் நிருபர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுவதால் இந்த தொகுதியில் தற்போது நான் அதிக கவனம் செலுத்துவதாக கூறுவது தவறு.
எங்களை பொறுத்தவரை அ.திமு.க.-பா.ஜ.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி பணிகளை செய்து வருகிறோம்.
இதற்கு முன்பும் கோவை வடக்கு தொகுதியில் மட்டுமல்ல அனைத்து தொகு திகளிலும் நாங்கள் பணிகள் செய்துள்ளோம். உங்களுக்கு இப்போதுதான் தெரிகிறது.
நான் எங்கு போட்டியிடுவது என்பது குறித்து கட்சி தலைமை தான் அறிவிக்கும்.
எங்களை பொறுத்தவரை முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு அவர் சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்பது ஆசை.
நடிகர் கமல்ஹாசன் பாராளுமன்றத்தில் பேசியது குறித்து ஒன்றும் புரியவில்லை.
அவர் பேசியது ஒன்றும் புரியாததால் தான் அவரை கோவை மக்கள் இங்கிருந்து அனுப்பி வைத்தார்கள்.
தமிழகத்தை பொறுத்த வரை திராவிட மாடல் ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது. வருகிற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.