பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும்- மடப்புரம் அஜித்குமாரின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி
- சம்பவம் நடந்த போது எனது மகனை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர்.
- இரவு நீண்ட நேரமாகியும் 2 பேரும் வீட்டுக்கு வரவில்லை.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் (வயது 28) என்பவரை கடந்த ஜூன் மாதம் நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அஜித் குமாரை அழைத்துச் சென்று தாக்கி கொன்றதாக மானாமதுரை தனிப்படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது சி.பி.ஐ. தரப்பில் போலீஸ் காவலில் தான் அஜித்குமார் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. விசாரிக்க சொன்னதால் கடுமையாக தாக்கி போலீசார் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 10 போலீஸ்காரர்களுக்கு தொடர்பு உள்ளது. நகை திருட்டு எதுவும் நடக்கவில்லை. பொய் புகாரில் அஜித் குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதி, ஒன்றுமே இல்லாத காரணத்திற்காக ஒரு அப்பாவியை தாக்கி கொலை செய்துள்ளனர். மனம் பதைபதைக்கிறது என்று தெரிவித்ததோடு பொய் புகார் அளித்த நிகிதா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் திருப்புவனத்தில் அஜித்குமாரின் தாயார் மாலதி இன்று பேட்டி அளித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது மகனை போலீசார் அடித்து கொன்று உள்ளனர். இந்த வழக்கில் எனது மகன் திருடன் இல்லை என்று நீதிபதி கூறியிருப்பது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. இருப்பினும் எனது மகன் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
சம்பவம் நடந்த போது எனது மகனை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர். ஆனால் அது குறித்து எனக்கு எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை. வீட்டுக்கு வந்த போலீசார் பீரோவை திறந்து அதில் இருந்தவைகளை சோதனை செய்தனர்.
அப்போது மற்றொரு மகனையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர். இரவு நீண்ட நேரமாகியும் 2 பேரும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் எனக்கும் பயம் ஏற்பட்டது. போலீஸ் நிலையத்திற்கு சென்ற போதும் அங்கு என்னை போலீசார் விரட்டி விட்டனர். உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் கேட்ட போதும் மகன்களை போலீசார் விசாரித்து விட்டுவிடுவார்கள் என்று கூறினார்கள். அதை நம்பி இருந்த நிலையில் எனது மகனை போலீசார் அடித்து கொன்று உள்ளனர். எனது மகன் நகையை எடுத்தது யார் பார்த்தார்கள்? பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும்.
அஜித் குமாரை விசாரிக்க சொல்லி 5 போலீஸ்காரர்களிடம் கூறிய உயர் அதிகாரி யார்? என்பது எங்களுக்கு தெரியவேண்டும்.
கஞ்சிக்கு இல்லாவிட்டாலும் வைராக்கியத்துடன் மகன்களை வளர்த்துள்ளேன். ஆனால் நகை திருட்டு பொய் புகாரை கூறி எனது மகனை சாகடித்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் எதற்காக எனது மகனை அடித்தார்கள்? யார் அடிக்க சொன்னது? எனது மகனை கொலை செய்து சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்கள் உட்பட யாரும் வெளியே வரக்கூடாது.
சி.பி.ஐ. விசாரணை மேல் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு தாய் என்ற உணர்வுடன் நீதிபதி நேற்று இந்த வழக்கில் சில கருத்துக்களை முன் வைத்துள்ளதை உணர்ந்துள்ளேன் என்றார்.