தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக உருவானதுதான் அ.தி.மு.க.,-பா.ஜ.க., கூட்டணி- வானதி சீனிவாசன்

Published On 2025-10-03 20:22 IST   |   Update On 2025-10-03 20:22:00 IST
  • தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும்.
  • ஒரு தொகுதியில் கூட தி.மு.க., ஜெயிக்க கூடாது. குப்பை முதல் அனைத்திலும் ஊழல்.

ஜி.எஸ்.டி., வரி நீக்கம் மற்றும் குறைப்பு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக., சார்பில் அரிசி கடை வீதி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தையும், தமிழையும் மோடி என்றும் விட்டுக் கொடுத்ததில்லை. தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார். ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் பெருமளவு விலை குறைந்துள்ளது. மத்திய அரசு நிதி வழங்காமல் வஞ்சனை செய்கிறது என தி.மு.க. அரசு குற்றச்சாட்டு தெரிவிக்கிறது. ஆனால் வரி பகிர்வு 50 சதவிகிதம் வழங்கப்பட்ட பின்னரும் மத்திய அரசின் பகிர்வில் இருந்து மேலும் 41 சதவீதத்தை வழங்குகிறது. இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு.

டாஸ்மாக் நடத்தி குடும்பங்களை சீரழித்து வருகின்றனர். மேலும் 10 ரூபாய் பாலாஜி வாங்கும் 10 ரூபாயையும் சேர்த்துக் கொள்கின்றனர். வரி வசூலிக்கும் முறையை சீரமைத்ததால் 13 சதவீதம் தமிழக வரி வருவாய் உயர்ந்துள்ளது. எத்தனை வரி வருவாய் கொடுத்தாலும் நாம் வாழ்வது குப்பைக்கு மத்தியில் தான். கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வேலை செய்வதே கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும்.

மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். 200 தொகுதி அல்ல 2 தொகுதி கூட ஜெயிக்க முடியாது. தமிழக மக்கள் உங்கள் வேஷத்தை பார்த்து வருகின்றனர். கரூரில் மக்கள் துயரத்தை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. திட்டமிடப்பட்டு கலவரம் செய்ய ஏதோ நடைபெற்று உள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தி.மு.க., அரசு தோல்வி அடைந்துள்ளது. தோட்டத்து விவசாயிகள் அச்சத்தில் வாழ வேண்டிய நிலை உள்ளது.

பெண்கள், முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் ஒரு தொகுதியில் கூட தி.மு.க., ஜெயிக்க கூடாது. குப்பை முதல் அனைத்திலும் ஊழல். மின் கட்டணம் கட்ட முடியாமல் சிறு நிறுவனங்கள் தவித்து வருகின்றனர்.

திராவிட மாடல் என்பது மக்கள் நல அரசு அல்ல, மோடியை எதிர்த்து பேச வேண்டும் என்பதே., பா.ஜ.க., அ.தி.மு.க., கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. உங்களை வீட்டுக்கு அனுப்ப ஏற்படுத்தப்பட்ட கூட்டணி இது. ஒரு குடும்பத்திற்கு சொந்தமான கட்சி கிடையாது. அடிமட்ட தொண்டர் கூட மேடைக்கு வர முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News