டாஸ்மாக் முறைகேடு வழக்கு: FIR-களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
- முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர்.-கள் அடிப்படையில் சோதனை- ED
- எந்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் டாஸ்மாக்கில் சோதனை நடத்தியது என்பதை அறிந்து கொள்ள தாக்கல் செய்ய உத்தரவு.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர்.-கள் அடிப்படையில் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது.
அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் "டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-களை தாக்கல் செய்ய வேண்டும்" என அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எந்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் சோதனை நடத்தியது என்பதை அறிந்து கொள்ள உத்தரவிட்டதாக தெரிவித்ததுடன், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.