அண்ணாமலையிடமிருந்து பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் TRB ராஜாவின் மகன் - தமிழிசை கண்டனம்
- மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வென்றவர்களுக்கு அண்ணாமலை பதக்கம் வழங்கினார்.
- டி.ஆர்.பி. ராஜா தனது மகனை அழைத்து அறிவுரை கூற வேண்டும் என்று தமிழிசை தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிபட்டியில் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது.
இந்த போட்டிக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார்.
அப்போது அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் TRB ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, அதை கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் அந்த இடத்தில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், TRB ராஜா மகனின் இந்த செயலுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "ஆளுநர், அண்ணாமலை என்று சிறப்பு விருத்தினராக தகுதிக்கு ஏற்ப தான் கல்வி நிறுவனங்கள் அழைக்கின்றன. அங்கு விருத்தினராக வருபவர்களுக்கு மரியாதை தர வேண்டும். விருது வாங்க வருபவர் மரியாதை செய்ய வேண்டிய கடமை. அப்போது தனிப்பட்ட உணர்வுகளை வெளிகாட்டுவது சரியானது கிடையாது. திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது. காழ்ப்புணர்ச்சி அரசியலை திமுக கைவிட வேண்டும். டி.ஆர்.பி. ராஜா தனது மகனை அழைத்து பராபட்சமாக நடந்து கொள்ள கூடாது என அறிவுரை கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.