தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தில் தமிழில் முற்றோதுதல்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Published On 2025-06-18 18:50 IST   |   Update On 2025-06-18 18:50:00 IST
  • திருச்செந்தூர் கோவிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
  • இதற்கான திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.

கும்பாபிஷேக விழாவிற்காக ராஜகோபுரம் கீழ்ப்பகுதியில் பிரமாண்ட யாக சாலை அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. 8,000 சதுர அடியில் யாக சாலையும், 2,000 சதுர அடியில் பக்தர்கள் அமர்ந்து யாகசாலை பூஜையை காணும் வகையில் கேலரியும் அமைக்கப்படுகிறது. யாகசாலையில் 76 யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன. ஜூலை 1-ம் தேதி யாகசாலை பூஜை தொடங்குகிறது.

இதற்கிடையே, திருச்செந்தூர் கோவிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை தமிழில் நடத்தவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். யாக பூஜையில் தமிழில் மந்திரம் சொல்லாவிட்டால் கும்பாபிஷேகத் தினத்தன்று முற்றுகை போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர்.

இந்நிலையில், யாகசாலையில் 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தர் அனுபூதி ஆகியவை தமிழில் முற்றோதுதல் நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, கோவில் நிர்வாகம் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூலை 7-ம் தேதி காலை 6:15 மணிமுதல் 6:50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடக்க உள்ளது. இதற்காக 8,000 சதுரடியில் 76 யாக குண்டங்களுடன் பிரமாண்ட வேள்வி சாலை அமைக்கப்படுகிறது.

வேள்வி சாலை வழிபாடு நாட்களில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாதஸ்வர இன்னிசை நடக்கும்.

காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News