மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார்.
- கட்சி தலைமை அனுமதியின்றி செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த மாதம் சந்தித்து பேசினார்.
எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார்.
அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்டோர் அமித்ஷாவை சந்தித்து சென்ற நிலையில் செங்கோட்டையனும் தனியாக சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் சந்தித்து பேசி உள்ளார். சென்னை சோழா ஓட்டலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக கூறப்பட்ட சூழலில் சென்னையில் மீண்டும் சந்தித்து பேசி உள்ளார். கட்சி தலைமை அனுமதியின்றி செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் மீண்டும் சந்தித்துள்ளது அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.