பா.ஜ.க ஆக்டோபஸ் மாதிரி எல்லா கட்சிகளையும் விழுங்கி இருக்கிறது- செல்வப்பெருந்தகை
- கூட்டணியில் இழுபறி எதுவும் கிடையாது. பேசிக் கொண்டு இருக்கிறோம்.
- கூட்டணிக்காக அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு தந்து உள்ளோம்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் அறிமுக கூட்டமும் பயிற்சி முகாமும் டெல்லியில் நடக்கிறது. கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.கூட்டணியில் இழுபறி எதுவும் கிடையாது. பேசிக் கொண்டு இருக்கிறோம்.
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு என்ன கவலை இருக்கிறது. அ.தி.மு.க. கட்சியை விட்டு விடாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லுங்கள். பா.ஜ.க ஆக்டோபஸ் மாதிரி எல்லா கட்சிகளையும் விழுங்கி இருக்கிறது. அடுத்து விழுங்க போக இருக்கிற கட்சி அ.தி.மு.க. தான். அ.தி.மு.க.வை முக்கால் வாசி விழுங்கி விட்டது.இன்னும் கொஞ்சம் இருக்கும் கட்சியை விட்டு விடாமல். எடப்பாடி பழ்னிச்சாமி பாதுகாப்பாக வைத்து கொள்வதே பெரிய விசயம்.
அ.தி.மு.க. கூட்டணி மேடை ஏறிவிட்டார்கள் என்கிறீர்கள். கார்ல் மாக்ஸ் சிலை திறப்பு விழாவில் தி.மு.க. கூட்டணி தலைவர்களும் கைகோர்ந்து இருந்தோம். 18-ந் தேதி எல்லாரும் சேர்ந்து மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளோம். எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
பா.ம.க.வை சேர்ப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார். பிற கட்சிகளின் பிரச்சினைகளில் காங்கிரஸ் மூக்கை நுழைக்காது. இதை தவறாக பதிவு செய்து உள்ளனர். ஆனால் அதுபோல் எதுவும் சொல்லவில்லை. கூட்டணிக்கு தமிழ்நாடு தலைவராக உள்ள முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார்.
நாடாளுமன்றத்தில் தான் ஜனநாயகம் பிறக்கிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் செய்ய அனுமதிக்க வேண்டும். பேசவிட மாட்டோம் என்பது சர்வாதிகாரம். நாடாளுமன்ற பேரவை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தந்து உள்ளனர்.100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.கூட்டணிக்காக அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு தந்து உள்ளோம். கட்சி மேலிடம் பேசி கொண்டு இருக்கிறது. கொஞ்சம் பொறுத்திருங்க்ள்.
இவ்வாறு அவர் கூறினார்.