சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் போராட்டத்தை தொடரும் தூய்மைப் பணியாளர்கள்... திணறும் காவல்துறை!
- இன்றுகாலை அண்ணா அறிவாலயம் முன் போராட்டம் நடத்தினர்.
- போலீசார் இல்லாத இடங்களை பார்த்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6-வது மண்டலங்களில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்றுகாலை அண்ணா அறிவாலயம் முன் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனிடையே மற்றொரு தரப்பினர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் கருணாநிதி சிலை முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் போலீசார் இல்லாத இடங்களை பார்த்து போராட்டத்தை தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து வருகின்றனர். இதனால் காவல்துறையினர் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் போராட்டத்தை எங்கு கையிலெடுக்கிறார்கள் என்பது தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.