தமிழ்நாடு செய்திகள்

அதிகரிக்கும் காய்ச்சல்- பொது இடங்களில் முககவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Published On 2025-09-03 07:20 IST   |   Update On 2025-09-03 07:20:00 IST
  • காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டக் கூடாது.
  • வெளியே சென்று வந்த உடன் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

சென்னை:

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.

காய்ச்சலுடன் சேர்ந்து உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி ஆகிய பாதிப்புகளும் காணப்படுகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களில் இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பே அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். இன்புளூயன்சா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு பரவுகிறது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும் போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முககவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பருவகால மாற்றம் காரணமாக இன்புளூயன்சா வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் தான் அதிகம் காணப்படுகிறது. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டக் கூடாது. மருத்துவ சிகிச்சை தேவை. இதேபோல, பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் முக கவசம் அணிந்து செல்வது நல்லது. ஆனால், கட்டாயம் கிடையாது. வெளியே சென்று வந்த உடன் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News