பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது
- 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- ஆன்லைனில் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி கடந்த 20-ம் தேதி முடிவடைந்தது.
சென்னை:
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
இந்தக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வியாண்டில் (2025-2026) சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி கடந்த 6-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அனைவருக்கும் 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ம் தேதி ஆன்லைன் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி கடந்த 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.