தமிழ்நாடு செய்திகள்

புதுக்கோட்டை இளைஞர் படுகொலை- 2 பேர் கைது

Published On 2025-04-05 09:18 IST   |   Update On 2025-04-05 09:18:00 IST
  • மழையூர் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்ம ஆசாமிகள் சிலர் முருகேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
  • சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவரது மகன் முருகேசன் (வயது 25), மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று இரவு மழையூர் கடைவீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

மழையூர் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்ம ஆசாமிகள் சிலர் முருகேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், தலை, தோள்பட்டை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்த முருகேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே முருகேசன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தகவலை அறிந்த அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மழையூரில் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் முருகேசன் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதே பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முருகேசன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News