தமிழ்நாடு செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் மோடி இதயத்தில் தனி இடம் உள்ளது- அண்ணாமலை

Published On 2025-05-16 11:57 IST   |   Update On 2025-05-16 11:57:00 IST
  • தமிழக மக்களை சில அரசியல் கட்சியினர் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.
  • தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வலுவாக உள்ளது.

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.

இந்திய ஜனாதிபதி தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திற்கு சில கேள்விகளை கேட்டுள்ளார். தமிழக மக்களை சில அரசியல் கட்சியினர் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளில் எந்த தவறும் இல்லை என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுவரை அரசியல் அமைப்பு சட்டம் 143 ஐ பயன்படுத்தி ஜனாதிபதிகள் 15 முறை உச்ச நீதிமன்றத்திற்கு கேள்வி எழுப்பி உள்ளனர். 1991-ம் ஆண்டு கர்நாடக அரசு தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை குழு தீர்ப்பளித்தது.

அன்றைய கர்நாடக முதல்-மந்திரி பங்காரப்பா தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அப்போது அரசியல் அமைப்பு சட்டம் 143 பயன்படுத்தப்பட்டு கர்நாடகா அரசின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தியாவில் ஜனநாயகம் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு பாரத பிரதமர் இதயத்தில் தனி இடம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கொங்கு பகுதியில் வீடு புகுந்து கொலை செய்கிறார்கள்.

தென் தமிழ்நாட்டில் ஆணவ படுகொலை நடைபெறுகிறது. சென்னையில் கூலிப்படை தாக்குதல்கள் நடைபெறுகிறது.

தமிழகம் கொலை காடாக மாறி உள்ளது. சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

சட்டம் ஒழுங்கு காரணமாக 2026-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியை தமிழக மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள்.

இமாச்சல பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு நினைத்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News