கூட்டணி ரகசியத்தை நாளை உடைக்கும் பிரேமலதா விஜயகாந்த்...
- ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தே.மு.தி.க. இருக்கிறது.
- கனிம வளக்கொள்ளை தடுக்கப்படும்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற கேப்டன் ரத யாத்திரை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அவரது இந்த ரத யாத்திரை நேற்று கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வந்தது.
தொடர்ந்து அங்கு நடந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
சென்னை கோட்டை முதல் கன்னியாகுமரி வரை நடந்த உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற கேப்டன் ரத யாத்திரை நிகழ்ச்சி இன்று கொட்டாரம் சந்திப்பில் நிறைவு பெற்றுஉள்ளது. இனி நமது கட்சிக்கு எல்லாம் நல்லதாக நடக்கும். படித்தவர்கள் அதிகமாக இருக்கும் மாவட்டம், கன்னியாகுமரி. இங்கு தான் குமரி கண்டம் இருந்தது. அதேபோல தமிழ் மொழி பிறந்ததும் இந்த குமரி கண்டத்தில்தான்.
ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தே.மு.தி.க. இருக்கிறது. 2026-ல் நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். கூட்டணி குறித்து சென்னையில் பிப்ரவரி 3-ந் தேதி (நாளை) அறிவிப்பேன். கன்னியாகுமரி சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலம் ஆகும். தே.மு.தி.க. இடம் பெறும் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த சுற்றுலா தளம் மேம்படுத்தப்படும்.
தோவாளை மலர் சந்தையில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். கனிம வளக்கொள்ளை தடுக்கப்படும். மயிலாடியில் கல் சிற்ப பூங்கா அமைக்கப்படும். சுசீந்திரத்தில் தடுப்பணை கட்டப்படும்." என அவர் தெரிவித்தார்.