தமிழ்நாடு செய்திகள்

வருகிற 10-ந்தேதி கும்பகோணத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: ராமதாஸ் கலந்து கொள்கிறார்

Published On 2025-07-01 11:03 IST   |   Update On 2025-07-01 11:03:00 IST
  • தைலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இன்று மாலை 3 மணி அளவில் வானூர் அருகே மொரட்டாண்டியில் வானூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது.

திண்டிவனம்:

பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் கருத்து மோதல் நிலை வருகிறது. இந்த நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதேபோல டாக்டர் ராமதாஸ் மீதும் அன்புமணி ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இரு தரப்பினரும் மாறி மாறி தனது ஆதரவாளர்களுடன் பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகின்றனர் .மேலும் இருவரும் பல்வேறு நிர்வாகிகளை நியமனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதேபோல அன்புமணி ராமதாஸ் ஆதரவாளரான புதியதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ்-ல் நியமிக்கப்பட்ட விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

அதேபோல இன்று மாலை 3 மணி அளவில் வானூர் அருகே மொரட்டாண்டியில் வானூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் தைலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் வருகிற 10-ந்தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்கிறார். அன்று மாலை 4 மணியளவில் பூம்புகார் சென்று ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி பூம்புகாரில் நடைபெறும் மகளிர் மாநாட்டு திடலை பார்வையிடுகிறார். அன்று மாலை 6 மணியளவில் மயிலாடுதுறையில் நடைபெறும் மாவட்ட பொதுக்குழுவில் கலந்து கொள்ள உள்ளார்.

போட்டி பொதுக்குழுக்கள் நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் டாக்டர் ராமதாஸ் நேரடியாக கலந்து கொள்ளும் முதல் பொதுக்குழுவாக கும்பகோணம் பொதுக்குழு நடைபெற உள்ளது. இது பாட்டாளி மக்கள் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News