'மோன்தா' புயல்- எண்ணூரில் அதிகபட்சமாக 12 செ.மீ. மழைப்பொழிவு
- வடசென்னையில் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
- கத்திவாக்கத்தில் 9.5 செ.மீ. மழைப்பொழிவு பதிவு.
சென்னை:
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'மோன்தா புயல்', இன்று மாலை அல்லது இரவில் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் நிலையில், காக்கிநாடா துறைமுகத்தில் பெரிய அபாயத்தைக் குறிக்கும் 8ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் அபாயத்தைக் குறிக்கும் 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
'மோன்தா' புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், 'மோன்தா' புயல் காரணமாக வடசென்னையில் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நேற்று காலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூல் 12 சென்டி மீட்டரும், கத்திவாக்கத்தில் 9.5 செ.மீ., விம்கோ நகரில் 8 செ.மீ., மணலி மாதவரம், பெரம்பூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.