தமிழ்நாடு செய்திகள்

வேலூரில் கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

Published On 2025-06-25 20:10 IST   |   Update On 2025-06-25 20:10:00 IST
  • மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 1 மணியளவில் திறந்து வைத்தார்.
  • சிலம்பாட்டத்தில் கின்னஸ் சாதனை படைத்த 2 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று, நாளை நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இதற்காக இன்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்படும் சாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தார்.

ரெயில் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து காரில் வேலூர் நகருக்கு வரும் அவருக்கு சாலையின் இருபுறமும் நின்று கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 1 மணியளவில் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் 21,766 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

வேலூர் சுற்றுலா மாளிகையில் நடந்த நிகழ்வில், 12 பேருக்கு பட்டா வழங்கி முதல்வர் தொடங்கி வைத்தார்.

12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் 9 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

சிலம்பாட்டத்தில் கின்னஸ் சாதனை படைத்த 2 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

இந்நிலையில், வேலூர் கெங்கநல்லூரில் திமுக சார்பில் கட்டப்பட்ட கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் திறந்து வைத்தார். 700 கிலோ வெண்கலத்தால் நிறுவப்பட்ட கலைஞர் கருணாநிதி சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்

சிலை திறப்பை தொடர்ந்து 30 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

Tags:    

Similar News