தி.மு.க.வை சீண்டிப் பார்த்தால் தமிழ்நாடே பதிலடி தரும்: மு.க.ஸ்டாலின்
- எஸ்.ஐ.ஆரில் இந்தியா முழுக்க பல மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
- தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளின்போது வாக்காளர்களை நீக்கவிடாமல் உழைத்த இயக்கம் திமுக.
மதுரை:
மதுரை உத்தங்குடியில் தி.மு.க. தென் மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான பயிற்சி மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 58 தொகுதிகளின் 1.9 லட்சம் பாக முகவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் மூர்த்தி வெள்ளி செங்கோல் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
வீரம் என்றால் அது மதுரைதான். பாசம் என்றால் அது மதுரைதான். கோயில் என்றால் அது மதுரைதான். சாப்பாடு என்றால் அதுவும் மதுரைதான். இங்கே எல்லாமே FAMOUS தான்.
எஸ்.ஐ.ஆரில் இந்தியா முழுக்க பல மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளின்போது வாக்காளர்களை நீக்கவிடாமல் உழைத்த இயக்கம் திமுக.
கடந்த 2 மாதங்களில் மட்டும் தி.மு.க. 7 மாநாடுகளை நடத்தியுள்ளது. பூத் அளவில் நம்மை போன்று வலிமையாக உள்ள கட்சி இந்திய அளவில் இல்லை.
மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க. நமது இயக்கத்தைத் தொட்டுப் பார்க்க நினைத்தால் தமிழ்நாடே பதிலடி தரும்.
200 தொகுதிகளுக்கும் கூடுதலாக வெற்றி பெறுவதே நமது லட்சியம். அடுத்த 2 மாதங்களுக்கு உங்களுக்கும் சரி, எனக்கும் சரி No Rest. வாக்குப்பதிவு அன்று பூத்துக்கு வந்து வாக்காளர்கள் நமக்கு வாக்கு செலுத்தும் வரை ஓய்வே இருக்கக்கூடாது. தி.மு.க. அரசின் சாதனை திட்டங்களை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்ல வேண்டும். சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் கவனத்தில் கொண்டு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.