தமிழ்நாடு செய்திகள்

நானே தவறு செய்தாலும் என் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்- அமைச்சர் பெரியசாமி

Published On 2025-05-07 13:53 IST   |   Update On 2025-05-07 13:53:00 IST
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எடப்பாடி பழனிசாமி தினந்தோறும் கூறி வருகிறார்.
  • ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக தமிழக காவல் துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக வைத்துள்ளார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் அமைச்சர் இ.பெரியசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிறுமலையில் பட்டா கேட்டு 35 வருடம் போராடிய பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. பட்டா கேட்பவர்களுக்கு வனத்துறையுடன் பேசி அதற்கான வாய்ப்புகள் இருந்தால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. பஸ் வசதி இல்லாத அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. நத்தம் தொகுதி மட்டும் புறக்கணிக்கப்படுகிறது என்பதை ஏற்க இயலாது. எங்கெங்கு பஸ்கள் தேவையோ அங்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எடப்பாடி பழனிசாமி தினந்தோறும் கூறி வருகிறார். இந்தியாவிலேயே அமைதிப்பூங்கா என்றால் அது தமிழ்நாடு மட்டும்தான். மற்ற மாநிலங்களை ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இளம்பெண்கள் அச்சமின்றி நடந்து செல்லும் வகையில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

விமானத்தில் ஏறி அமர்ந்த நபரையே தமிழ்நாடு போலீசார் கைது செய்து அழைத்து வந்துள்ளனர். ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக தமிழக காவல் துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக வைத்துள்ளார்.

யார் தவறு செய்தாலும் அமைச்சராகிய நானே தவறு செய்தாலும் அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொள்ள மாட்டார். போலீசார் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும் போது அது உண்மையா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தவறு எங்கு நடந்தாலும் அதனை தடுக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News