தமிழ்நாட்டில் 2 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- இந்த ஆண்டு இதுவரையில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 93 பள்ளி குழந்தைகளுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- 14.3 சதவீத குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கண் கண்ணாடி மூலம் பார்வையை சரி செய்ய வாய்ப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கண்புரை 82 சதவீதம், விழித்திரை பாதிப்பு 5.6 சதவீதம், நீரிழிவு நோய் விழித்திரை பாதிப்பு 1 சதவீதம், கண் நீரழுத்த நோய் பாதிப்பு 1.3 சதவீதம் மற்றவை 10.1 சதவீதம் ஆகும். 14.3 சதவீத குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கண் கண்ணாடி மூலம் பார்வையை சரி செய்ய வாய்ப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரையில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 93 பள்ளி குழந்தைகளுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 214 குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளி குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்து, இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி சிறார்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.