பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம்- அமைச்சர் கீதா ஜீவன்
- எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்டமாட்டார்கள்.
- சமூக நலத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. அன்புக்கரங்கள் திட்டத்தில் இன்னும் மக்கள் விண்ணப்பிக்கலாம். எத்தனை விண்ணப்பம் வந்தாலும் கொடுக்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்கள் நடமாட முடியாமல் உள்ளனர் என பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். உண்மை அது அல்ல. இந்தியாவில் பாதுகாப்பான நகரம் சென்னை, கோவை தான் என மத்திய அரசின் புள்ளி விபரம் கூறுகிறது. பாலியல் குற்றத்திற்கு உள்ளாக கூடிய பெண்கள் தி.மு.க. ஆட்சியில் தைரியமாக புகார் அளிக்க முன் வருகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்டமாட்டார்கள். ஆளுங்கட்சியை குறை கூற வாய்ப்பு கிடைக்காதா? என்ற நோக்கில் குற்றம் சொல்கின்றனர். பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மீது புகார் கூறும் பழைய நிலைமை மாறி இருக்கிறது. பெண்களின் நிலை இன்று உயர்ந்திருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் பாலியல் குற்றச்சாட்டை மட்டும்தான் கூற முடியும் என்பதால் எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும். சமூக நலத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.