மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்- வைகோ
- மல்லை சத்யாவுக்கும், வைகோ மற்றும் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
- மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மல்லை சத்யா நடத்தினார்.
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
சமீபத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார்.
இதையடுத்து, மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மல்லை சத்யா நடத்தினார்.
இந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக மல்லை சத்யாவை நீக்கி வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ம.தி.மு.க. உடமைகள், ஏடுகள் அனைத்தையும் ஒப்படைக்கக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முன்னதாக ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் தற்போது மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்பட்டதாக வைகோ அறிவித்துள்ளார்.