தேர்தலை நடத்த தடையில்லை - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
- தேர்தல் முடிவுகள் வெளியான பின் வழக்கு தொடரலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
- கடைசியாக 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பிறகே இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
52 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (பிரஸ் கிளப்) பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கிளப்பின் பொதுக்குழுவால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுதல் குழுவின் கோரிக்கையின் பேரில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, 25 ஆண்டுகளுக்கு பிறகு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர் மற்றும் ஐந்து கமிட்டி உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் டிசம்பர் 15-ந்தேதி அன்று நடத்தப்படுவதாக பாரதிதாசன் அறிவித்தார். இதனை தொடர்ந்து தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், மெய்யறிவாளன் (எ) விஸ்வநாதன் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி விட்டதால் தேர்தல் நடைமுறைகளில் தலையிட முடியாது. தேர்தல் முடிவுகள் வெளியான பின் வழக்கு தொடரலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இதனால், மீண்டும் தேர்தல் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடைசியாக 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பிறகே இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
25 ஆண்டுகளாக பத்திகையாளர் மன்றத்துக்கு தேர்தல் நடத்த முயன்றும் நடைபெறவில்லை. 2005-ம் ஆண்டு தேர்தல் நடத்த முயன்றபோது அசத்துல்லா நீதிமன்றம் சென்று தடை பெற்றார். 2012-ம் ஆண்டு தேர்தல் நடவடிக்கை தொடங்கியபோது பெருமாள் (எ) பாரதிதமிழன் நீதிமன்றம் சென்று தடை பெற்றார்.
அதனை தொடர்ந்து, இந்த ஆண்டு, தேர்தல் நடவடிக்கை ஏறக்குறைய முடிவடையவுள்ள நிலையில் இவர்களின் நண்பர் மெய்யறிவாளன் (எ) விஸ்வநாதன் தடைகோரி நீதிமன்றத்தை அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது.