தஞ்சை பெரிய கோவிலில் தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிரும் மின்விளக்குகள்
- பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுடன் தொடுக்கப்பட்ட போரில் இந்தியா வெற்றி பெற்றது.
- மாலை முதல் இரவு வரை எரியும் இந்த மூவர்ண மின் விளக்குகள் சில நாட்களுக்கு தொடரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெரிய கோவில் ராஜராஜன் வாயிலில் போர் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் தேசியக் கொடியிலுள்ள மூவர்ணத்தில் மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை முதல் எரியவிடப்பட்டுள்ளன.
காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுடன் தொடுக்கப்பட்ட போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வெற்றியைப் பறைசாற்றும் வகையிலும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்திலும் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி சரகத்தில் திருச்சி மெயின்கார்டு கேட், தஞ்சாவூர் பெரிய கோவில், கன்னியாகுமரி வட்டக்கோட்டை ஆகியவற்றில் தேசியக் கொடியின் மூவர்ணத்தில் மின் விளக்குகள் பொருத்துமாறு துறையின் தலைமையகம் அறிவுறுத்தியது.
இதன்படி, தஞ்சாவூர் பெரிய கோவிலில் இரண்டாவது நுழைவுவாயிலான ராஜராஜன் வாயில் முன்புறம் இடதுபுற மதில் சுவரில் சிகப்பு வண்ணத்திலும், ராஜராஜன் கோபுரத்தில் வெள்ளை நிறத்திலும், வலதுபுற மதில் சுவரில் பச்சை நிறத்திலும் என மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, எரிய விடப்பட்டுள்ளன.
மாலை முதல் இரவு வரை எரியும் இந்த மூவர்ண மின் விளக்குகள் சில நாட்களுக்கு தொடரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.