தமிழ்நாடு செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. லைவ் அப்டேட்ஸ்..

Published On 2024-12-12 07:52 IST   |   Update On 2024-12-12 19:40:00 IST
  • சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று ஆங்கிலத்தேர்வு நடைபெற இருந்தது.

தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தொடர் மழை மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், அரியலூர், ராணிப்பேட்டை, கரூர், வேலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, திருநெல்வேலி மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் மட்டும் இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று ஆங்கிலத்தேர்வு நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. 

2024-12-12 11:35 GMT

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு. நீர்த்தேக்கத்திற்கு 5900 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் அதிக அளவு தண்ணீர் திறப்பு.

2024-12-12 11:25 GMT

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் ஏரியின் நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியாகும்.

2024-12-12 11:23 GMT

இன்று இரவு 7 மணி வரை 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2024-12-12 11:23 GMT
சென்னையில் நெற்றிரவு முதல் கனமழை விட்டுவிட்டு பெய்து வரும்  நிலையில், தற்போது பெய்யும் மழையுடன் மழை குறைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
2024-12-12 11:22 GMT

திருச்செந்தூரில் திடீரென 100 மீட்டர் அளவிற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

2024-12-12 11:20 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் மாலை 5 மணி முதல் விநாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு 5,900 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், 5000 கன அடி நீர் வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது.

2024-12-12 09:53 GMT

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2024-12-12 07:29 GMT

செம்பரம்பாக்கத்தில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக உபரி நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

2024-12-12 07:19 GMT

தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழந்தது.

2024-12-12 06:35 GMT

ஓரிரு இடங்களில் 21 செமீ-க்கும் மேலாக மழைப் பெய்யும் என்பதால் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News