கட்சியில் பெயர் வாங்க ஆளுநர் கையால் பட்டம் பெற மறுப்பதா?- அண்ணாமலை கண்டனம்
- மாணவி ஒருவர் ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் என மறுப்பு.
- அவர் நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் ராஜன் என்ற நபரின் மனைவி ஆவார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவர் ஆளுநர் கையால் பட்டம் பெற மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் திமுக பிரமுகரின் மனைவி எனக் கூறப்படும் நிலையில், அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் ராஜன் என்ற நபரின் மனைவி, ஜீன் ஜோசப் ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?.
இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.