அரசு ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் இருப்பதா?- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
- தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தி.மு.க. அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும், ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய வரிகள் மூலம் அரசின் வருமானம் அதிகரிக்கப்பட்ட நிலையிலும், இந்த கோரிக்கையை நிறைவேற்றாது தி.மு.க. அரசு காலத்தைக் கடத்துவதைப் பார்த்தால், இந்த கோரிக்கை நிறைவேறாதோ என்ற அச்சம் தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல், "வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்பதற்கேற்ப அ.தி.மு.க. ஆட்சியின் மீது பழிபோடாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தி.மு.க. அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.