மெட்ரோ வழித்தடம் 4-ன் நீட்டிப்பு: விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனை ஒப்பந்தம் கையெழுத்து..!
- வழித்தடம் 4-ன் நீட்டிப்பு- கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை.
- தாம்பரம் முதல் வேளச்சேரி வரை.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1. வழித்தடம் 4-ன் நீட்டிப்பு- கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை.
இந்த நீட்டிப்பு, மெரினா கடற்கரை மற்றும் தலைமைச் செயலகத்திற்கான மெட்ரோ இணைப்பை மேம்படுத்துவதற்கு தோராயமாக சுமார் 7 கிலோ மீட்டர் நீளத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம், தினசரி பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளும் எளிதில் அணுகுவதற்கும், நகரப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.
2. தாம்பரம் முதல் வேளச்சேரி வரை
சுமார் 21 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம் தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய புறநகர்ப் பகுதிகளை சென்னை மெட்ரோ ரெயில் வழித்தடம்-1-இல் உள்ள கிண்டி மெட்ரோ நிலையத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வழித்தடம் தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி மற்றும் கிண்டி பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வசதியுடன் உருவாக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மேற்கண்ட இரண்டு பணிகளுக்கும் விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான ஆலோசனை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை M/s Systra MVA Consulting India Pvt நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை வழித்தடம் 4-ன் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிபதற்கு ரூ. 38,20,000 மற்றும் தாம்பரம் முதல் வேளச்சேரி வரை ரூ.96,19,000/- மதிப்பாகும். இந்த விரிவான திட்ட அறிக்கைகள் சமர்பிப்பதற்கான காலம் 120 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் Systra MVA Consulting India Pvt நிறுவனத்தின் உயர் துணைத் தலைவர் பர்வீன் குமார் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த திட்ட அறிக்கைகள் வழித்தட பாதை அமையும் இடங்கள், பயணிகளின் எண்ணிக்கை, பல்வேறு போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் விரிவாக மதிப்பீடு செய்யப்படும். இந்த அறிக்கை தகவலறிந்த முடிவெடுப்பதற்கு மற்றும் எதிர்கால திட்ட செயலாக்கத்திற்கும் அடித்தளமாக அமையும்.
சென்னையின் வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகள் மற்றும் நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கு உகந்த, விரிவான மற்றும் எதிர்கால நோக்குடன் பொது போக்குவரத்து பயன்பாட்டை உருவாக்குவதில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முனைப்புடன் செயல்படுகிறது.