தமிழ்நாடு செய்திகள்

என்னை தோற்கடிக்க உங்க அப்பாவே வந்தாலும் முடியாது: முத்தரசனுக்கு இ.பி.எஸ். சவால்

Published On 2025-08-19 21:26 IST   |   Update On 2025-08-19 21:26:00 IST
  • அதோடு 2026 தேர்தலில் உங்கள் சொந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என்கிறார் முத்தரசன்.
  • உங்க அப்பாவே வந்தாலும் முடியாது. 2021 ஆண்டிலேயே சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாங்கள் வென்று காட்டினோம்.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காட்பாடி, வேலூர், ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.

காட்பாடி தொகுதி சித்தூர் பேருந்து நிலையம் அருகே புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் இணைந்து மக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

காட்பாடி தொகுதி பாதி நகரம், பாதி கிராமம், விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம், பயிர்க்கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்தோம், பேரிடர் நேரத்தில் பயிர்க்காப்பீடு மூலம் இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். வறட்சி நிவாரணம் கொடுக்கப்பட்டது.

நேற்றைய தினம் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் சேலம் மாநாட்டில் பேசினார். எடப்பாடி பழனிசாமி கம்யூனிஸ்ட் கட்சியை தரம் தாழ்ந்து பேசுவதாகச் சொல்கிறார். நான் என்ன கேட்டேன், கம்யூனிஸ்ட் எதிர்க்கட்சியா அல்லது ஆளும்கட்சியா? எங்க வரிசையில்தான் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்றுதான் கேட்டேன்.

மக்களுக்கு பிரச்சனை வரும்போது, அதை அரசுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். கூட்டணியாக இருந்தாலும் குரல் கொடுக்க வேண்டும், அதைத்தான் சுட்டிக்காட்டினேன். ஆனால் அவருக்கு கோபம் வந்து ஏதேதோ பேசியிருக்கார். அதுமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் பணம் வாங்கியதாக நான் சொன்னதாகச் சொல்கிறார். அதை நாங்கள் சொல்லவில்லை. உங்களைக் காட்டிக்கொடுத்ததே திமுகதான். நாங்கள் சொல்லவில்லை. செய்தி வெளியானதா இல்லையா? தேர்தல் நிதி கொடுக்கப்பட்டதா… இல்லையா?.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததை தப்பு என்கிறார் முத்தரசன். திமுக கூட பாஜக-வோடு கூட்டணி அமைத்து மத்தியில் அங்கம் வகித்தது எல்லாம் முத்தரசனுக்குத் தெரியவில்லை. அதைப் பேசுவதற்கு முடியாத முத்தரசனுக்கு எங்களைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியுமில்லை.

அதோடு 2026 தேர்தலில் உங்கள் சொந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என்கிறார் முத்தரசன்.

உங்க அப்பாவே வந்தாலும் முடியாது. 2021 ஆண்டிலேயே சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாங்கள் வென்று காட்டினோம், எடப்பாடி தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியும் இல்லாமல் எடப்பாடி தொகுதியில் 45 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருக்கிறோம். நாங்கள் மக்களுக்காக உழைத்திருக்கிறோம். மக்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்து வாக்களிப்பார்கள்.

உங்களைப் போல காலத்துக்கேற்ப நிறம் மாறுகின்ற கட்சி அதிமுக அல்ல, பஞ்சோந்தி போல் நிறம் மாறுவதில்லை. கொள்கையின் அடிப்படையில்தான் செயல்படும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்துக்கு மட்டும்தான்.

நீங்கள் கொள்கை என்கிறீர்கள், திமுகவும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரே கொள்கையா? நேற்றைக்கு முன் தினம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஸ்டாலின் பேசும்போது, 'நான் பாதி கம்யூனிஸ்ட்' என்கிறார். அப்படியென்றால் பாதியை விழுங்கிவிட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான் சொல்வது இதுதான். திமுக தவறுக்கு துணை போகாதீர்கள், உங்களுக்கென தனிச் செல்வாக்கு உள்ளது. அது சரிந்துகொண்டு வருகிறது என்று சொன்னேன். தன்னை பாதி கம்யூனிஸ்ட் என்கிறார் ஸ்டாலின. அதாவது பாதியை விழுங்கிவிட்டார் ஸ்டாலின். இனியும் நீங்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் உங்களை யாரலும் காப்பாற்ற முடியாது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Tags:    

Similar News