முதலாம் ஆண்டு மாணவனுக்கு கூட.. தமிழகத்துக்கு அதிக நிதி - மோடி சொன்ன கணக்கு - பாடம் எடுத்த ப.சிதம்பரம்
- அதிக நிதி கொடுத்தாகவும் இருப்பினும் இங்கு சிலர் அழுதுகொண்டிருக்கிறார்கள் என்றும் பேசியிருந்தார்.
- பொருளாதார அளவுகோல்' என்பது முந்தைய ஆண்டுகளை விட, நடப்பாண்டில் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும்.
இன்று ரமேஷாரத்தில் பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தபின் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தமிழகத்துக்கு முந்திய ஆட்சிகளை விட அதிக நிதி கொடுத்தாகவும் இருப்பினும் இங்கு சிலர் அழுதுகொண்டிருக்கிறார்கள் என்றும் பேசியிருந்தார்.
இந்நிலையில் மோடியின் பேச்சுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எதிர்வினை ஆற்றியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "2004-14 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டதை விட 2014-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு அதிக நிதியை வழங்கியதாக பிரதமரும் மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
உதாரணமாக, தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களுக்கு தனது அரசு முன்பை விட ஏழு மடங்கு அதிகமாக நிதியை வழங்கியுள்ளதாக பிரதமர் கூறினார். 'பொருளாதார அளவுகோல்' என்பது முந்தைய ஆண்டுகளை விட, நடப்பாண்டில் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும்.
முதல் ஆண்டு பொருளாதாரம் படிக்கும் மாணவரைக் கேட்டால் கூட இதைச் சொல்வார். GDP, ஒன்றிய பட்ஜெட், அரசின் செலவினம் என அனைத்தும் ஒரு ஆண்டை விட அடுத்த ஆண்டில் அதிகமாகத்தான் இருக்கும்.
எண்கள் என்ற அடிப்படையில் அதிகமாக இருப்பது முக்கியமல்ல. ஒட்டுமொத்த GDP, செலவினத்தின் விகிதாச்சார அடிப்படையில் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளதா? என்பதே முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.