தமிழ்நாடு செய்திகள்

நாளை ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட்- சீமானுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Published On 2025-04-07 19:27 IST   |   Update On 2025-04-07 19:27:00 IST
  • சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு.
  • இன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், சீமான் வழக்கறிஞர் நாளை ஆஜராக அனுமதி கேட்டனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தூண்டுதலின்பேரில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தன்னையும், தனது குடும்பத்தினரையும் சமூக ஊடகங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் சித்தரித்து கருத்துகள் பதிவிடுவதாகவும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சீமான் முயற்சிப்பதாகவும் திருச்சி 4-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் டி.ஐ.ஜி. வருண்குமாா் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கின் விசாரணையின் போது டிஐஜி வருண்கமார் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து வாக்குமூலம் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி விஜயா கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்ட நிலையில் இதுவரை சீமான் ஆஜராகவில்லை.

இந்த நிலையில், இவ்வழக்கு இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும், இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறக்கப்படும் என்று நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.

ஆனால் சீமான் தரப்பு வழக்கறிஞர், சீமான் நாளை ஆஜராக அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து சீமான் நாளை காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் இல்லையெனில் பிடிவாரண்ட் பிறக்கப்படும் என்றும் நீதிபதி விஜயா உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News