இளைஞர் ஆகாஷ் மரணம் - உடற்கூராய்வுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
- ஆகாஷ் உட்பட 5 பேரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.
- டிஜிபி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
மானாமதுரையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில் உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 6-ம் தேதி அழகர் என்பவரை அரிவாளால் தாக்கிய வழக்கில் ஆகாஷ் டெலிசன் (26) என்ற இளைஞர் உட்பட 5 பேர் மானாமதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து ஆகாஷ் 8ஆம் தேதி உயிரிழந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யும்போது தப்பிக்க முயன்று பாலத்தில் இருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டதாகவும், அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. போலீசாரால் இளைஞர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், அதனை மறைக்க இவ்வாறு கூறுவதாகவும் பெற்றோரும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் உரிய நீதி கிடைக்கும் வரை ஆகாஷின் உடலை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அஜித்குமார் காவல் மரணவழக்குப்போல இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இளைஞர் ஆகாஷின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த முழு செயல்முறையையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.