தமிழ்நாடு செய்திகள்

திருவாலங்காடு அருகே தண்டவாளத்தில் 'போல்ட்-நட்டு'களை கழற்றி ரெயிலை கவிழ்க்க சதி

Published On 2025-04-25 14:49 IST   |   Update On 2025-04-25 14:49:00 IST
  • ரெயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
  • தண்டவாளத்தில் இருந்த போல்ட்- நட் மற்றும் சிறிய இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி சென்று விட்டனர்.

திருவள்ளூர்:

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் நோக்கி செல்லும் ரெயில்கள் திருவாலங்காடு ரெயில் நிலையம் வழியாக கடந்து செல்லும். மின்சார ரெயில்கள், சரக்கு ரெயில்கள் மற்றும் விரைவு ரெயில்கள் போக்குவரத்திற்கு இந்த ரெயில்பாதை முக்கியமானதாக உள்ளது.

இதில் திருவாலங்காடு- அரிச்சந்திராபுரம் இடையே பிரதான தண்டவாளத்தில் இருந்து பிரியும் "லூப் லைன்" பாதை உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் இந்த இணைப்பு தண்டவாளத்தில் இருந்த போல்ட்- நட் மற்றும் சிறிய இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி சென்று விட்டனர். இதனால் அங்கிருந்த சிக்னலில் கோளாறு ஏற்பட்டது.

ரெயில் பாதையில் சிக்னல் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த திருவாலங்காடு நிலைய அலுவலர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக தண்டவாளத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது திருவாலங்காடு- அரிச்சந்திராபுரம் அருகே இணைப்பு தண்டவாளத்தில் இருந்த போல்ட்-நட் மற்றும் இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி எடுத்துச் சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் பிரதான தண்டவாளத்தில் இருந்து லூப்லைனுக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் அவ்வழியே மற்ற பயணிகள் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.

 

இதுகுறித்து உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரவு நேரம் என்பதால் லூப்லைனை உடனடியாக சரிசெய்வதில் சிரமம் ஏற்பட்டது. பிரதான தண்டவாளத்தில் எந்த பிரச்சினையும் இல்லாததால் அவ்வழியே மற்ற ரெயில்கள் பாதிப்பு இல்லாமல் இயக்கப்பட்டன.

தகவல் அறிந்ததும் தெற்கு ரெயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி.ஈஸ்வர ராவ், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத், தமிழக ரெயில்வே ஐ.ஜி ஏ.ஜி.பாபு திருத்தணி டி.எஸ்.பி.கந்தன், கைரேகை நிபுணர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர். சென்னையில் இருந்து மோப்ப நாய்கள் ஜான்சி, தாராவும் வரவழைக்கப்பட்டன.

போலீசார் மற்றும் அதிகாரிகள் தண்டவாளத்தில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்ட இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய்கள் அங்கிருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றது.

அதிகாலை முதல் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். காலை 8.30 மணி அளவில் தண்டவாள இணைப்புகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டது. பின்னர் அரக்கோணத்தில் இருந்து வந்த சரக்கு ரெயிலை சரி செய்யப்பட்ட தண்டவாளத்தில் இயக்கி சரிபார்த்தனர். திருவாலங்காட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் இறந்து உள்ள நிலையில் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திருவாலங்காடு அருகே தண்டவாளத்தில் இருந்து போல்ட்-நட்டுகளை மர்ம நபர்கள் கழற்றி சென்று உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரெயிலை கவிழ்க்கும் முயற்சியாக இது நடந்து இருக்கலாம் என்று ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக அரிச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்த சிலரிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் லூப்லைனில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்டதால் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது.

சரக்கு ரெயில் மீது கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர். எனினும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

இந்தநிலையில் தற்போது மீண்டும் திருவாலங்காடு அருகே அதேபோல் தண்டவாள லூப்லைன் பகுதியில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்டு உள்ள சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News