மோப்ப நாய் மூலம் துப்பு துலக்கிய போலீசார் - தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு துண்டு
தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி
- சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய நாய் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.
- ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தவித்தபடி நின்றனர்.
சேலம்:
ஈரோட்டில் இருந்து சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு தினசரி ரெயிலாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் நேற்றிரவு 9 மணியளவில் வழக்கம் போல ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த மாவேலிபாளையத்தை கடந்து மகுடஞ்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது .
அப்போது ரெயில் என்ஜின் சக்கரத்தில் இரும்பு துண்டு சிக்கிய நிலையில் தரதரவென சிறிது தூரம் இழுத்து சென்றது. ஏதோ விபரீதம் நடப்பதை அறிந்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.
பின்னர் கீழே இறங்கி சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் பெரிய அளவிலான இரும்பு துண்டு வைக்கப்பட்டிருந்ததும் அது ரெயில் என்ஜினின் சக்கரத்தில் சிக்கி இருப்பதும் தெரிய வந்தது.
இதனால் ரெயில் என்ஜின் பழுதானதால் தொடர்ந்து இயக்க முடியாத நிலையில் ரெயில் இருப்பதை அறிந்த என்ஜின் டிரைவர் இது குறித்து ரெயில்வே கோட்ட கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அங்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் சேலம், ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்கும் நோக்கில் பெரிய அளவிலான 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரெயில்தண்டவாளத்தின் குறுக்கே மர்ம நபர்கள் வைத்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து மோப்பநாயும் வரவழைத்து ஆய்வு செய்தனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய நாய் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.
இதற்கிடையே ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தவித்தபடி நின்றனர். தொடர்ந்து சேலத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு அந்த என்ஜின் பொருத்தப்பட்டது.
பின்னர் 2 மணி நேரம் தாமதமாக இரவு 11.45 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சென்ற எக்பிஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதே போல ஈரோடு மார்க்கமாக சென்னை மற்றும் பெங்களூரு செல்லும் 3 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் அந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரெயில்வே டி.எஸ்.பி.பாபு மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், இரவு நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி இருக்கலாம் என்றும், மது போதையில் அங்குகிடந்த 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே வைத்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பகுதி காட்டுப்பகுதி என்பதால் அங்கு கேமராக்கள் இல்லை. ஆனாலும் அருகில் உள்ள காளி கவுண்டம்பாளையம், மாவேலிக்கரை, மகுடஞ்சாவடி பகுதியில் தண்டவாள பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள உள்ள கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து குடிபோதையில் சுற்றி திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.