தமிழ்நாடு செய்திகள்

கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா - முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Published On 2026-02-25 10:27 IST   |   Update On 2026-02-25 10:31:00 IST
  • நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயிலை அவர் திறந்து வைத்தார். பின்னர் புத்தளம் அருகே கல்லடிவிளையில் மு.க.ஸ்டாலின் படைப்பகம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முழு உருவ சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* தமிழ்நாட்டின் தனித்துவமான மாவட்டமான கன்னியாகுமரி இந்திய துணை கண்டத்தின் தொடக்கம்.

* இந்திய துணை கண்டத்தின் தொடக்கமான குமரிக்கு வந்திருக்கிறேன்.

* கன்னியாகுமரியில் 61,500 சதுர அடியில் அமையவுள்ள மினி டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

* இஸ்ரோவுக்கு பல்வேறு விஞ்ஞானிகளை தந்த மாவட்டமான கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறேன்.

* மார்ஷல் நேசமணியின் போர்ப்படை தளபதியான விளங்கியவர் விடுதலைப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார்.

* முக்கடல் சூழ்ந்த குமரியில் முப்பால் கண்ட வள்ளுவருக்கு சிலை அமைத்த கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ளேன்.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் ரூ.4,260 கோடியில் 34 லட்சம் பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 7 பாலங்களை கட்டி உள்ளோம்.

* தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

* குமரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News