தமிழகத்தில் தொழில் தொடங்க ஜெர்மனிவாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
- களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன்.
- உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள்.
தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார்.
டசெல்டோர்ப் விமான நிலையத்தில், நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், சமூக தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் மலர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜெர்மனியில் அவரது பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பா முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களால் ஏற்பாடு செய்த நூற்றுக்கணக்கான அயலக தமிழர்கள் கலந்து கொண்ட மாபெரும் தமிழ் பண்பாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டின் சிறப்பை வெளிநாடுகளில் மேம்படுத்துவதற்கும் பங்களித்த ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல தமிழ்ச் சங்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
இதைத்தொடர்ந்து டசெல்டோர்பில் இன்று உயர்நிலை முதலீட்டாளர் மாநாடு நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று, உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் நேரடியாக கலந்துரையாடுகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள் என்று ஜெர்மனிவாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன். அவர்கள் அளித்த வரவேற்பின் ஆரவாரத்தில் அகம் குளிர்ந்தேன்.
தமிழ்நாட்டுக்கு வாருங்கள், நமது #DravidianModel அரசு அமைத்து வரும் தமிழர் தொன்மையின் பண்பாட்டுச் சின்னங்களைக் காணுங்கள்!
உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.