சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினை பொக்கிஷம் விருது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
- தமிழ்நாட்டின் சிறந்த கைவினைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது.
- 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
சென்னை:
கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட சிறந்த கைவினைஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் வாழும் கைவினைப் பொக்கிஷம்" எனும் விருது வழங்கப்படுகிறது.
அதன்படி, 2023-24-ம் ஆண்டிற்கான வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.முருகேசன் (தஞ்சாவூர் கலைத்தட்டு), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சொ.ராஜகோபால் (பஞ்சலோக சிற்பம்), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெ.ராதா (நெட்டி வேலை), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சி.பலராமன் (சுடுகளிமண் சிற்பம்), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சொ. நாகமுத்து ஆச்சாரி (மரச்சிற்பம்), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ச. கிருஷ்ணமூர்த்தி (தகட்டு வேலை), திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹம்சா பீவி (பனை ஓலை பொருட்கள்), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெ.கிருஷ்ணன் (பஞ்சலோக சிலைகள்) மற்றும் கன்னி யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செ. லில்லி மேரி (மூங்கில் பாயில் ஓவியம்) ஆகிய 9 விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் தகுதிச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
"பூம்புகார் மாநில விருது" தமிழ்நாட்டின் சிறந்த கைவினைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது.
அதன்படி, 2023-24-ம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சீ.வே.ராம கிருஷ்ணன் (உலோக சிற்பம்) மற்றும் கோ. குணசுந்தரி (காகிதக் கூழ் பொம்மைகள்), சி.காத்தான் (தஞ்சாவூர் ஓவியம்) மற்றும் ரெ.மெய்யர் (சுடு களிமண் சிற்பம்), செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கு. ரமேஷ் (மரச்சிற்பம்) மற்றும் ஹ. ஸ்ரீதர் (தேங்காய் ஓடு பொருட்கள்), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கா.கார்த்திகேயன் (பனை ஓலை பொருட்கள்), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.கல்யாண குமார் (காகித கூழ் பொம்மைகள்), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கி. சந்திரசேகரன் (கண்ணாடி கலைப் பொருட்கள்) ஆகிய 9 விருதாளர்களுக்கு முதலமைச்சர் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.