'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி- முதலமைச்சர் விளாத்திக்குளம், தென்காசி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை
- தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என கேட்டறிந்தார்.
- அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
நேற்று அவர் மதுரை தெற்கு மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என கேட்டறிந்தார். தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மற்றும் தென்காசி தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு ஆகியவை தொடர்பாக அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.