பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' கட்சிக்கு எதிராக வழக்கு
- ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய கட்சியை அறிவித்தார்.
- புதிய கட்சியின் கொடியிலும் யானை படம் இருப்பதாக த.வெ.க. சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நினைவேந்தல் சங்கமமாக நடந்தது. தென்னிந்திய புத்தவிகார் தலைவரும் ஆம்ஸ்ட்ராங் மனைவியுமான பொற்கொடி தலைமையில் அமைதிப் பேரணி காலையில் நடந்தது.
அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் சிலை திறப்பு விழா நடந்தது. நினைவேந்தல் மலரும் வெளியிடப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய கட்சியை அறிவித்தார். கட்சி பெயர், கொடியை அறிமுகம் செய்த பொற்கொடி 32 அடி உயர கம்பத்தில் கொடியேற்றினார்.
யானை தனது துதிக்கையில் பேனாவை பிடித்து எடுத்து செல்வதுபோல் உள்ள நீலம், வெண்மை நிறத்திலான கொடியை அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில், த.வெ.க. கொடியில் யானை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று நடந்த நிலையில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கிய கட்சியின் கொடியிலும் யானை படம் இருப்பதாக த.வெ.க. சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என பகுஜன் சமாஜ் தரப்பு பதில் அளித்தது.
இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.