தமிழ்நாடு செய்திகள்

படம் ஓடாமல் அரசியலுக்கு வந்தவர் விஜய் அல்ல- புஸ்சி ஆனந்த் பேச்சு

Published On 2026-02-21 11:20 IST   |   Update On 2026-02-21 11:20:00 IST
  • எங்கள் கட்சியில் உண்மை, உழைப்பு இருக்கிறது.
  • மக்களுக்கு சேவை செய்ய உச்சத்தில் இருக்கும் போதே வந்தவர்.

கடலூர்:

தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் மாவட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்தது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

தலைவர் விஜய்க்கு பிடித்த மாவட்டம் கடலூர். தானே புயல், சுனாமி வந்த போது, மக்களுக்கு உதவி செய்தார். கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்காக சேவை செய்து வருகிறோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் தலைவர் விஜய் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார்.

எங்கள் கட்சியில் உண்மை, உழைப்பு இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்ய உச்சத்தில் இருக்கும் போதே வந்தவர். ஓய்வு பெற்று, படம் ஓடாமல் அரசியலுக்கு வரவில்லை.

தி.மு.க. மக்களுக்கு எதையும் செய்யவில்லை. மக்கள் வரிப்பணத்தில்தான் செய்தீர்கள். அதுவும் சரியாக செய்யாமல் கையாளாகாத அரசாக தி.மு.க. இருக்கிறது.

நீங்கள் எப்படி வேஷம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஒரே தளபதி, தலைவர் விஜய்தான். கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளும் த.வெ.க. கோட்டையாக இருக்கும். தலைவர் விஜய் முதலமைச்சர் ஆவது உறுதி. பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியாக இருக்கும். ஆனால் தி.மு.க. 5 ஆண்டுகளில் மக்களுக்கு சேவை செய்யவில்லை.

வருகிற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும், விசில் சின்னத்தை வீடு, வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசினார்.

தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், பிப்ரவரி 20-ந்தேதி (நேற்று) தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கடைசி சட்டசபையாக இருக்கும்.

பீகார், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் தி.மு.க. இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான், உண்மையான விவரம் தெரிய வரும். சமூக நீதி கூட்டணி என்று சொல்லும் தி.மு.க., ஏன் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. அந்த கூட்டணியில் உள்ளவர்களும் இதுவரை கேட்கவில்லை. பா.ஜனதா போல், தி.மு.க.வுக்கும் அந்த எண்ணம் இல்லை.

விஜய் முதலமைச்சர் ஆன பிறகு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவார். பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவில்லை என்று கூறும், தி.மு.க.வினர், பேப்பர், நிர்வாகிகள் இல்லாமல், விஜய்யுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த தயாரா? தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் தான் போட்டி. பழம் நழுவி பாலில் விழும் என்பது அவுட் ஆப் சிலபஸ், பழம் நழுவி கெட்டுப்போன பாலில் விழுந்துள்ளது. கெட்டுப்போன பாலை யாரும் குடிக்கமாட்டார்கள். ஜி.பே. மூலமாக தான் தி.மு.க. கூட்டணி ஓடுகிறது. விஜய்யை ஜெயிக்க ஷேர் ஆட்டோவில் ஏற்றுவது போல கட்சிகளை ஏற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வரலாற்றில் 2-வது முறையாக தி.மு.க. ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. கருணாநிதி இருக்கும் போதே நடக்கவில்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் போதா நடக்கப்போகிறது என்றார்.

நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசுகையில், 45 ஆண்டுகால அரசியலுக்கு பிறகு தூக்கி எறிந்த என்னை தூக்கி பிடித்தவர் தலைவர் விஜய். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு 3-வது தலைவராக விஜய் ஆள போகிறார்.

நம்மை வீழ்த்த எவராலும் முடியாது. தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் இருந்து தூக்கி எறிய தலைவர் விஜய்யால் மட்டுமே முடியும். தி.மு.க.வை வீழ்த்த த.வெ .க. தலைவரால் மட்டுமே முடியும். 234 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெறும் என்றார்.

Tags:    

Similar News